நடிகர் திலகம் சிவாஜி கணேசனும், கலைஞர் கருணாநிதியும் நல்ல நண்பர்கள். இருவருக்கும் கலை உணர்வு அதிகம். ஒருவர் எழுத்தாற்றலில் வல்லவர் என்றால் இன்னொருவர் நடிப்பில் சூரர். அதனால் அவர்களுக்குள் பல குணங்கள் ஒத்துப்போனது.

நடிகர் திலகத்தின் முதல் படமான பராசக்திக்கு வசனம் எழுதியவரே கலைஞர் தான். அது பட்டி தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பி சிவாஜி என்ற மாபெரும் கலைஞன் வெளி உலகுக்குத் தெரிய ஆரம்பித்தான். அடுத்ததாக மனோகரா படத்தில் வீறு கொண்டு பொங்கி எழும் வசனங்களை எழுதி சிவாஜியை சிம்மக்குரலில் ஆர்ப்பரிக்கச் செய்தார் கலைஞர்.

நடிகர் திலகம் சிவாஜிக்கும், தனக்குமான நட்பு எப்படிப்பட்டது என கலைஞர் ஒருமுறை இப்படி சொன்னார். 1963ல் எனது தாயார் அஞ்சுகம் அம்மையார் இறந்த போது ஒரு மலர் வெளியிட்டார்கள். அதில் பதிவு செய்திருக்கிறார் சிவாஜி. அதுதான் இந்தப் பதிவு.

சிறுவயது முதல் எங்களுக்குள் நெருக்கமான பழக்கம் உண்டு. இதற்கு எத்தனையோ காரணங்கள் இருக்கு. கலையோ, அன்போ, கொள்கையோ, குணமோ எதுவுமே எங்களை உயிராக நினைக்க வைத்தது. நாளடைவில் அது வளர்ந்து வலு பெற்றது.

அது யார்? வாய் நிறைய மு.க. என்று நான் உரிமையோடு அழைக்கும் அவர் தான். பல நாள்கள் எங்களை ஒன்றாக அமர வைத்து அஞ்சுகம் அம்மையார் உணவு பரிமாறுவார். அப்போதெல்லாம் பாரபட்சமாக அவர் பரிமாறுவதை நான் பார்த்திருக்கிறேன்.

‘நல்ல பண்டங்களை எல்லாம் ஒருவருக்கு அதிகமாகவும், மற்றவருக்குக் குறைவாகவும் வைப்பார். இப்படிச் செய்யலாமா’ என நான் கேட்டேன். ‘என்னுடைய செல்லப்பிள்ளை. அதனால் தான் உனக்கு அதிகம்’ என்று என்னிடம் பல முறை கூறியவர் தான் அஞ்சுகம் அம்மையார். அப்படிப்பட்ட செல்லத்தை மறந்துவிட்டு போய்விட்டார். நான் என்றும் அஞ்சுகம் அம்மையாரை மறக்க முடியாது. ஏன்னா அவரும் ஒரு தாய்.

மேற்கண்ட தகவலை பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *