ஒரு திரைப்படம் வெற்றியடைய முக்கிய காரணமாக இருப்பது கதைதான். எனவேதான் நல்ல கதைக்கு பலரும் அடித்துக்கொள்கிறார்கள். அடிக்கடி கதை திருட்டு நடக்கும் சம்பவங்களும் செய்திகளாக வெளியாவதுண்டு. ஒரு உதவி இயக்குனரின் கதையை திருடி பெரிய இயக்குனர், பெரிய நடிகரை வைத்து தனது கதை என சொல்லி படமெடுத்த சம்பவமெல்லாம் கோலிவுட்டில் நடந்திருக்கிறது.

அதேபோல், ஒரே கதையை கொஞ்சம் மாற்றி பல இயக்குனர்கள் எடுப்பது, ஒரு நடிகருக்கு சொல்லப்பட்ட கதையில் வேறு நடிகர் நடிப்பது என எல்லாமே நடக்கும். அதை தவிர்க்கவே முடியாது. ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் ரஜினி நடிக்கவிருந்த படத்திலிருந்து இயக்குனர் சுந்தர்.சி விலகியது கூட கதை பிரச்சனையால்தான். அவர் சொன்ன கதை ரஜினிக்கு பிடிக்கவில்லை.

சுந்தர்.சி இப்போது நயன்தாராவை வைத்து மூக்குத்தி அம்மன் 2 படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தை முதலில் இயக்கவிருந்தவர் ஆர்.ஜே.பாலாஜி. அவர் அந்த படத்திலிருந்து விலகியதால் சுந்தர்.சி உள்ளே வந்தார். மூக்குத்தி அம்மன் 2 படத்திற்காக எழுதிய கதையை ஆண் தெய்வமாக மாற்றி கருப்பு என தலைப்பிட்டு சூர்யாவைத்து எடுத்து வருகிறார் ஆர்.ஜே.பாலாஜி.

இந்நிலையில்தான் ரஜினிக்கு கதை சொல்லப்போகும் இயக்குனர்களின் பெயர் பட்டியலில் ஆர்.ஜே.பாலாஜி பேரும் அடிபடுகிறது. சில வருடங்களுக்கு முன்பு அவர் விஜய்க்கு சொன்ன அதே கதையைத்தான் ரஜினிக்கு சொல்லவிருக்கிறார் என்கிறார்கள். பல வருடங்களுக்கு முன்பு விஜய் சேதுபதி மற்றும் சந்தானம் ஆகியோருக்கு சொன்ன கதையைத்தான் சுந்தர்.சி ரஜினியிடம் சொன்னார் என செய்திகள் வெளியான நிலையில், ஆர்.ஜே.பாலாஜி விஜய்க்கு சொன்ன கதையை ரஜினிக்கு சொல்லப்போகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *