Cinema History
கமல் நடிச்சா சரி வராது…நீங்க தான் நடிக்கணும்…ரஜினியை வற்புறுத்திய பிரபல தயாரிப்பாளர்…! .அப்புறம் நடந்தது என்ன?
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த போக்கிரி ராஜா படம் எப்படி உருவானது? முதலில் நடிக்கத் தயங்கிய ரஜினி அதன்பின் நடித்தது எப்படி என்ற விவரங்களை சுவைபட சொல்கிறார் ஏவிஎம்.சரவணன்.
சுட்டாலு உன்னாரு ஜாக்கிரதா என்ற தெலுங்கு படம் ஒன்று வெளியானது. அதன் அர்த்தம் என்னன்னா சொந்தக்காரங்க எல்லாம் இருக்காங்க. ஜாக்கிரதை என எச்சரிக்கிறது. உடனே பாலையா என்பவரிடம் பேசி அந்தப்படத்தைத் தமிழில் தயாரிப்பதற்கு உரிமையை வாங்கினோம்.
அப்போது எல்லாம் போன் அதிகளவில் புழக்கத்தில் இல்லை. அதனால் எங்கள் புரொடக்ஷன் எக்சிகியூட்டிவ் கே.வீரப்பனை நேரில் அனுப்பி வைத்தேன். அவர் போய் உங்களை சார் பார்க்க விரும்புகிறார் என்றார்.
அந்தப்படத்தைப் பார்க்க வருமாறு ரஜினிக்கு அழைப்பு விடுத்தேன். படத்தின் பெயரைச் சொன்னதும் ஐயய்யோ என்றார். நான் ஏற்கனவே அந்தப்படத்தைப் பார்த்து விட்டேன். பாலையா போட்டுக் காட்டினார். எனக்குப் படம் பிடிக்கல. சாரி. இதுல நான் நடிக்க விரும்பலனு மறுத்துவிட்டார்.
ஏன் வேண்டாம்கிறீங்கன்னு நான் விடாமல் கேட்டேன்.
ரொம்ப சாதாரணமான ரோல் அது. இப்ப நான் நடிக்கிற காளி, ஜானி படம் ரிலீஸானதும் என் இமேஜ் எங்கேயோ போயிடும். அப்ப போய் இது மாதிரியான சாதாரண ரோல்ல நடிச்சா சரியா வராது.
ரஜினி நீ சொல்றது தப்பு. முதல்ல உங்களோட நாலு படம் நல்லா ஓடணும். படம் நல்லா ஓடுனா உங்க கேரக்டரைப் பற்றி அவங்க எதிர்பார்ப்பாங்க. எம்ஜிஆர், சிவாஜி எல்லாம் வெற்றி பெற்றது
இப்படி தான் என்றேன். சார்…சார்…அவங்க கிரேட்…அவங்கள என்னோட கம்பேர் பண்ணாதீங்க…ப்ளீஸ்…நான் தனி ஆள். என் வழியும் தனி. நீங்க ஏன் இந்தப் படத்தைக் கமலை வச்சி எடுக்கக்கூடாதுன்னு கேட்டார்.
கமல் நடிச்சா சட்டம் ஒரு இருட்டறை சாயல் இருக்கும். நான் சொல்ற படத்தை நீங்க ஏற்கனவே பார்த்திருந்தாலும் சரி. இப்போ இன்னொரு தடவை பாருங்கன்னு சொன்னேன்.
ஏவிஎம் ஜி தியேட்டருக்கு ஒரு நாள் இரவு 10 மணிக்கு பைக் ஓட்டியபடி படம் பார்க்க வந்தார் ரஜினி. நீங்க ஏன் சிரமப்படறீங்க. நானே படம் பார்த்துவிட்டுச் செல்கிறேன் என்றார். அதன்பிறகும் அவர் அந்தப் படத்தில் என்னோட வற்புறுத்தலுக்காகவே நடிக்க சம்மதித்தார்.
விசுவை அழைத்து அவரையும் படம் பார்க்க சொன்னோம். படத்தின் பிளஸ் பாயிண்டுகள், மைனஸ் பாயிண்டுகளை ஒரு பேப்பரில் எழுதிக் கொடுத்துவிட்டார்.
ராதிகா ரோலை டெவலப் செய்யணும். படத்தில் 3வதாக ஒரு கேரக்டரை உருவாக்கணும்னும் விசு சொன்னார். அப்படி செய்ததும் படம் பிரமாதமாக வந்தது.
பஞ்சு அருணாசலத்தின் வசனங்கள் ஒவ்வொன்றும் பஞ்ச் வசனங்களாக இருந்தன. படத்தின் போக்கிரி ரவி கேரக்டருக்கு ஜோடியாக ராதிகா நடித்தார். ரஜினிக்கு ஈடு கொடுக்கும் வகையில் ரௌடியாகவே மாறினார் ராதிகா. ரஜினிக்கு ஜோடி ஸ்ரீதேவி. ராஜாவுக்கு ஏற்ற ராணியாக நடித்து அசத்தினார்.
அதேபோல படத்தில் வில்லனாக முத்துராமன் நடித்து அசத்தினார். படத்திற்கு இடையில் திடீரென அவர் இறந்து விட்டார். அவரது டப்பிங்கிற்கு ஒருவர் வாயில் கூழாங்கற்களைப் போட்டுக் கொண்டு பேசினார். படம் 100 நாள் ஓடி சக்கை போடு போட்டது.
படத்தின் வெற்றிவிழாவில் ரஜினி பேசியபோது, படத்தில் சரவணன் சாரோட கட்டாயத்திற்காகத் தான் நடித்தேன். ரசிகர்களின் நாடிப்பிடித்துப் பார்த்து அவர்களின் ரசனையைக் கணித்து விடுவார். இனி அவர் எந்தக் கதை சொன்னாலும் ஆர்கியு பண்ணாமல் நடித்து விடுவேன்…என்றார்.