Cinema News
விருப்பமில்லாத காட்சியில் நடித்து அவார்டு வாங்கிய ‘அம்மா’ நடிகை… இப்படி எல்லாமா நடக்கும்!!
கடந்த 2006 ஆம் ஆண்டு பரத், கோபிகா, நாசர், வடிவேலு, சரண்யா பொன்வண்ணன் ஆகியோர் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் “எம் மகன்”. இத்திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றிருந்தது.
“எம் மகன்” திரைப்படத்தை திருமுருகன் இயக்கியிருந்தார். இவர் “மெட்டி ஒலி”, “நாதஸ்வரம்” போன்ற பிரபல தொலைக்காட்சி தொடர்களை இயக்கியவர். இந்த நிலையில் “எம் மகன்” திரைப்படத்தில் ஒரு காட்சியில் சரண்யா பொன்வண்ணன் குழாயடியில் உருளுவது போன்ற ஒரு காமெடி காட்சி இடம்பெற்றிருக்கும். இந்த காட்சி குறித்து சரண்யா பொன்வண்ணன் சமீபத்திய ஒரு பேட்டியில் பகிர்ந்துகொண்டார்.
“எம் மகன் திரைப்படத்தில் குழாயடியில் உருளுவது போன்ற காட்சியில் நடிப்பதற்கு மிகவும் கஷ்டப்பட்டேன். அந்த காட்சியில் நடிக்க எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. என் மேல் ஈரம் படுவது எனக்கு சுத்தமாக பிடிக்காது. அப்போது வடிவேலு அந்த காட்சியில் தான் உருளுவதாக கூறிவிட்டார். ஆனால் இயக்குனரோ நான்தான் அந்த காட்சியில் நடிக்க வேண்டும் என திடமாக கூறினார்.
இதையும் படிங்க: “ரஜினிக்கு நான் பாட்டெழுதுனேன்… ஆனா அது அவருக்கே தெரியாது”… வருத்தத்தை பகிர்ந்து கொண்ட வாலி…
நான் முடியாது என கூறிவிட்டேன். அப்போது இயக்குனர் என்னை தனியாக அழைத்துச்சென்று ‘மேடம், இந்த சீன் உங்களுக்காத்தான் எழுதுனேன். நீங்க நடிச்சாத்தான் நல்லா இருக்கும். தயவு செய்து இந்த காட்சியில் நடித்து படத்தை காப்பாற்றுங்கள்’ என என்னிடம் கூறினார். என்ன செய்வது, தலை எழுத்து என்று அந்த காட்சியில் நடித்துக்கொடுத்தேன். ஆனால் அத்திரைப்படத்திற்காகத்தான் எனக்கு சிறந்த துணை நடிகைக்கான மாநில விருது கிடைத்தது” என தனது அனுபவத்தை பகிர்ந்துகொண்டார்.