அழுது புலம்பியும் மனசு இறங்கலயே!.. வனிதா விஜயகுமாருக்கு நோட்டீஸ் அனுப்பிய இளையராஜா!...
Ilayaraja: தான் இசையமைத்த பாடல்களை தன்னுடைய அனுமதியின்றி திரைப்படங்களில் பயன்படுத்தினால் அதை நீக்க சொல்லியும், இழப்பீடு கேட்டும் இசைஞானி இளையராஜா தரப்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வது என்பது சமீபகாலமாகவே அதிகரித்துவிட்டது. வியாபார ரீதியாக தனது பாடலை திரைப்படங்களில் பயன்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்தே அவர் தரப்பில் நோட்டீஸ் அனுப்பப்படுகிறது.
ஆனால், இளையராஜா ஏதோ காசு ஆசை பிடித்தவர் என்பது போல அவரை பலரும் விமர்சித்து வருகிறார்கள். அதற்கெல்லாம் இளையராஜா பதில் சொல்வது இல்லை. மஞ்சுமெல் பாய்ஸ் படத்தில் குணா படத்தில் இடம் பெற்ற ‘கண்மணி அன்போடு காதலன்’ பாடல் முக்கிய பங்கு வகித்தது. இந்த படம் 200 கோடி வரை வசூல் செய்தது. அதனால் இளையராஜா நோட்டீஸ் அனுப்பினார்.
மேலும் கூலி படத்திற்கும் நோட்டீஸ் அனுப்பினார். தற்போது வனிதா விஜயக்குமார் நடித்து இயக்கியுள்ள Mrs & Mr என்கிற படத்தில் கமலின் மைக்கேல் மதன காமராஜன் படத்தில் இடம் பெற்ற ‘சிவராத்திரி தூக்கமேது’ பாடலுக்காக இளையராஜா தரப்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கிறது.
தன்னுடைய அனுமதியின்றி பயன்படுத்தப்பட்ட இந்த பாடல் காட்சியை நீக்கவேண்டும் என இளையராஜா தரப்பில் புகார் கூறப்பட்டிருக்கிறது. இத்தனைக்கும் இந்த படம் துவங்கப்படுவதற்கு முன் வனிதா இளையராஜாவை சந்தித்து ஆசி பெற்றார். இது தொடர்பாக மீடியாவிடம் பேசிய வனிதா ‘நான் இளையராஜா சார் வீட்டில் நிறைய வேலைகளை செய்திருக்கிறேன். பல நாட்கள் பூஜை செய்திருக்கிறேன். அவரின் வீட்டுக்கே மருமகளாக போக வேண்டியவள்’ என அழுது கொண்டே பேசினார்.
இது தொடர்பான மீம்ஸ்களும் இணையத்தில் வெளிவந்தன. இந்நிலையில், இளையராஜா தரப்பில் கொடுத்த வழக்கில் ஒரு வாரத்திற்குள் பதிலளிக்க வேண்டும் என வனிதாவுக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது.