கவுண்டமணியின் காமெடி இவ்ளோ கலக்கலா இருக்கே... இதுக்கெல்லாம் காரணகர்த்தா அவரா?
தமிழ்த்திரை உலகில் ஒருகாலத்தில் நகைச்சுவை நாயகர்களில் கொடிகட்டிப் பறந்தவர் கவுண்டமணி. இவரும் செந்திலும் சேர்ந்து விட்டால் அவ்ளோதான். அந்தக் காட்சியைப் பார்க்கும்போது சிரித்து சிரித்து வயிறு புண்ணாகிவிடும்.
இவர்களது நடிப்பைப் பார்த்து இவர்கள் ஹாலிவுட்டில் வரும் லாரல்-ஹார்டிக்கு இணையானவர்கள் என்று சிலாகித்தனர். அங்கு அவர்கள் தான் காமெடி இரட்டையர்கள். அதைப் போல தமிழ்சினிமா உலகில் கலக்கினார்கள் என்ற பெருமை கவுண்டமணிக்கும், செந்திலுக்கும் உண்டு.
அப்பேர்ப்பட்ட பெயர் வருவதற்கு காரணகர்த்தாவாக இருந்தவர் யார் தெரியுமா? அந்தக் கால காமெடி நடிகர் ஏ.வீரப்பன் தான். இவர் பணத்தோட்டம், தாழம்பூ, நாடோடி, சவாலே சமாளி, திருநீலகண்டர், பொன்னூஞ்சல் உள்பட பல படங்களில் நடித்துள்ளார். இவர் நடித்த படங்களில் மெட்ராஸ் டூ பாண்டிச்சேரி தான் ஸ்பெஷல்.
இவர் காமெடி டிராக் எழுதிய முதல் படம் பயணங்கள் முடிவதில்லை. இவர் எழுதிய காமெடிக்கு நடித்தவர் தான் கவுண்டமணி. அந்தப் படத்தில் வீரப்பன் எழுதிய ஒரு டயலாக் தான் இது. இந்த சென்னை மாநகரத்திலே, இவ்வளவு குறைந்த வாடகையில் வீடு கொடுப்பவர் நான்தான்னு கெத்தாக கவுண்டமணி பேசுவார். அது படத்தில் பார்க்கும்போது கலக்கலாக இருக்கும்.
அது மட்டும் அல்லாமல் வைதேகி காத்திருந்தாள் படத்தில் வரும் பெட்ரோமாக்ஸ் லைட்டே தான் வேணுமா காமெடியும், உதயகீதத்தில் வரும் தேங்காய் வெடிகுண்டு காமெடியும் இவர் எழுதியதுதான். அதே போல இதயகோவில் சலூன் கடை காமெடி, கரகாட்டக்காரன் வாழைப்பழ காமெடி, பேரீச்சம்பழ காமெடி, சின்னத்தம்பி மாலைக்கண் நோய் காமெடி என எல்லாமே சூப்பராக ஒர்க் அவுட் ஆனதுன்னா அதுக்குக் காரணமே ஏ.வீரப்பன்தான்.
கவுண்டமணி திரை உலகில் பெரிய காமெடியன் தான். ஆனால் அவரது காமெடிக்குப் பின்னால் இப்படி ஒரு ஜாம்பவான் இருக்கிறார் என்பது பலரும் அறியாத விஷயம்தான். அதே போல காமெடி டயலாக் எழுதிக் கொடுத்து விட்டால் மட்டும் போதுமா? அதை கரெக்டாக ஏற்ற இறக்கத்துடன் பேசி டெலிவரி செய்வது, பாடி லாங்குவேஜ்ல தானே எல்லாமே இருக்கு. ரசிகர்களை குலுங்க குலுங்க சிரிக்க வைத்து விடுவார். அந்த வகையில் இருவருக்குமே நல்ல திறமைதான் என்று சொல்ல வேண்டும்.