Cinema History
சிவாஜியிடமே “ஒன்ஸ் மோர்” கேட்ட வெளிமாநில இயக்குனர்… அரண்டுபோய் நின்ற கமல்ஹாசன்… அடப்பாவமே!!
1992 ஆம் ஆண்டு சிவாஜி கணேசன், கமல்ஹாசன், கௌதமி, ரேவதி ஆகியோரின் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் “தேவர் மகன்”. கமல்ஹாசனின் திரைப்பயணத்திலேயே காலத்துக்கும் பேசப்படும் கல்ட் கிளாசிக் திரைப்படமாக “தேவர் மகன்”அமைந்தது.
குறிப்பாக இதில் சிவாஜி கணேசனின் நடிப்பு பலரையும் வியக்க வைத்தது. மேலும் இத்திரைப்படம் ஆஸ்காருக்கும் அனுப்பப்பட்டது. இன்று வரை சினிமா ரசிகர்களால் சிறந்த திரைக்கதைக்காக போற்றப்படும் திரைப்படமாக “தேவர் மகன்” பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இத்திரைப்படம் குறித்தான ஒரு சுவாரஸ்ய சம்பவம் குறித்து கமல்ஹாசன், ஒரு பேட்டியில் பகிர்ந்துள்ளார்.
“தேவர் மகன்” திரைப்படத்தை பரதன் என்பவர் இயக்கியிருந்தார். இவர் ஒரு புகழ்பெற்ற மலையாள இயக்குனர். ஆனால் தமிழில் “சாவித்ரி”, “ஆவாரம்பூ” போன்ற சில திரைப்படங்களையே இயக்கியிருந்தார். இந்த நிலையில் “தேவர் மகன்” திரைப்படத்தின் படப்பிடிப்பின்போது சிவாஜி ஒரு காட்சியில் நடித்த விதம் பரதனுக்கு பிடிக்கவில்லையாம்.
அப்போது “சிவாஜி சார் நடித்தது நன்றாக இல்லை, ஒன்ஸ் மோர் போகலாம்” என கமல்ஹாசனிடம் கூறியிருக்கிறார். அதற்கு கமல் “அவரிடம் சென்று நல்லா இல்லை என எப்படி கூறமுடியும்?” என கேட்டிருக்கிறார். “சொல்லனுமே, எனக்கு பிடிக்கலையே” என பரதன் கூறியிருக்கிறார்.
“யோவ் போயா, நீ வெளியூர்க்காரன், இங்க வந்துட்டு இவர்கிட்ட அப்படியெல்லாம் சொல்ல முடியாது” என கமல் கூறியுள்ளார். “இல்லை, எனக்கு இன்னொரு டேக் வேண்டும்” என பரதன் உறுதியாக கூறியிருக்கிறார்.
அப்போது சிவாஜி “என்னங்கடா ஏதோ பேசிகிட்டே இருக்குறீங்க. சொல்லித் தொலையுங்களேன்டா” என கத்தினாராம். அதற்கு கமல்ஹாசன் “ஒன்னுமில்லை” என கூறியிருக்கிறார்.
இதையும் படிங்க:விருப்பமில்லாத காட்சியில் நடித்து அவார்டு வாங்கிய ‘அம்மா’ நடிகை… இப்படி எல்லாமா நடக்கும்!!
அதற்கு சிவாஜி “என்ன, நான் நடிச்சது நல்லா இல்லையா?” என அவரே கேட்டாராம். அதற்கு பரதன் “ஆமாம் சார்” என்று தைரியமாக கூறிவிட்டாராம். “சரி, என்ன வேணும்?” என கேட்டாராம் சிவாஜி. அதற்கு கமல் “ஒன்னுமில்லை. இன்னும் கொஞ்சம் சிறப்பா நடிச்சா நல்லா இருக்கும்” என சொன்னாராம்.
“இன்னும் சிறப்பான்னா, எப்படி?” என சிவாஜி கேட்க, “நீங்க பெரிய தேவர் கதாப்பாத்திரம் பண்றீங்க. இப்போ நடிச்சது கொஞ்சம் சின்ன தேவர் மாதிரி இருந்தது. பெரிய தேவர் வந்தா நல்லா இருக்கும்” என கமல் கூறினாராம். அதற்கு சிவாஜி “வரும், போங்க” என கூறிவிட்டு, அதன் பின் மீண்டும் அந்த காட்சியில் நடித்தாராம்.