மதயானைக்கூட்டம் இயக்குனர் விக்ரம் சுகுமாரன் திடீர் மரணம்... திரையுலகம் பேரதிர்ச்சி
பரமக்குடியைச் சேர்ந்தவர் இயக்குனர் விக்ரம் சுகுமாரன். இவர் மதயானைக்கூட்டம், ராவணக் கோட்டம் ஆகிய படங்களை இயக்கியுள்ளார். இவர் நேற்று நள்ளிரவில் திடீரென மாரடைப்பால் காலமானார். இது திரையுலகையே பேரதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.
சினிமா மோகத்தால் சென்னை வந்த இவர் 1999 முதல் 2000 வரை இயக்குனர் பாலுமகேந்திராவிடம் உதவியாளராக இருந்துள்ளார். வெற்றிமாறன் இயக்கிய பொல்லாதவன் படத்தில் தான் நடிகராக அறிமுகம் ஆனார். அந்த நட்பால் ஆடுகளம் படத்தில் வெற்றிமாறனுடன் இணைந்து வசனம் எழுதியுள்ளார். சசிகுமார் நடித்த கொடி வீரன் படத்திலும் நடித்துள்ளார்.
கதிர், ஓவியா நடித்த மதயானைக்கூட்டம் படத்தில் தான் இயக்குனராக அறிமுகம் ஆனார். படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. அடுத்த படமாக ராவணக் கோட்டத்தை இயக்கினார். இதில் சாந்தனு தான் ஹீரோ. படம் சுமாராகப் போனது.
அடுத்ததாக ஜல்லிக்கட்டை மையமாக வைத்து தேரும், போரும் என்ற படத்தை இயக்கி வந்தார். இந்நிலையில் நேற்று நள்ளிரவில் மாரடைப்பால் காலமானார். தயாரிப்பாளரிடம் கதை சொல்லி இருக்கிறார். தொடர்ந்து பஸ் ஏறிய நிலையில் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதாகத் தெரிகிறது. அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
அங்கு சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார். இவரது வீடு சென்னை ரெட்ஹில்ஸ் பகுதியில் உள்ளது. அங்கு இவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. தமிழ்சினிமா இயக்குனர்களில் இவரது படைப்பு மற்றவர்களைத் திரும்பிப் பார்க்கும் வகையில் இருந்தது. இவரது இறப்பு தமிழ்சினிமா உலகிற்கே பேரிழப்பு என்றுதான் சொல்ல வேண்டும்.
ராவணக்கோட்டம் படத்தில் நடித்த சாந்தனு தனது எக்ஸ்தளத்தில் அமைதியாக உறங்குங்க சகோதரா. உங்களிடம் இருந்து நான் நிறைய கற்றுக்கொண்டேன். ஒவ்வொரு தருணத்தையும் எப்போதும் போற்றுவேன். மிக விரைவாக சென்றுவிட்டீர்கள் என்றும் இரங்கல் தெரிவித்துள்ளார்.
தமிழ்சினிமா உலகில் கடந்த வாரம் நடிகர் ராஜேஷ் காலமானார். அதற்குள் இந்த வாரம் விக்ரம் சுகுமாரன் இறந்தது தமிழ்சினிமா உலகில் பேரதிர்ச்சியாக உள்ளது.