நடிகர் சங்கத்துக்கு கடன் இருக்கா இல்லையா? அப்படின்னா நிதி திரட்டுவது ஏன்?
நடிகர் சங்கத்துக்கு இன்னுமா கடன் இருக்கு...?
ஒரு காலத்தில் நடிகர் சங்கக் கடன் பிரச்சனை பெரிய அளவில் பூதாகரமாக இருந்தது. அதைக் குறைக்க பலரும் முயன்றார்கள். கலைநிகழ்ச்சிகள் எல்லாம் நடத்திப் பார்த்தார்கள். ஆனால் முடியவில்லை. புரட்சிக்கலைஞர் விஜயகாந்த் நடிகர் சங்கத் தலைவர் ஆனார். ஒட்டுமொத்தக் கடனையும் தீர்த்தார்.
அது மட்டும் அல்லாமல் நடிகர் சங்கத்தினர் அனைவரையும் ஒன்று திரட்டி பெரிய அளவில் கலைநிகழ்ச்சிகளை நடத்தினார். அப்போது அவர் அனைவரையும் ஒன்று சேர்க்கப் பட்ட கஷ்டம் கொஞ்சநஞ்சமல்ல. அந்த வகையில் விஜயகாந்த் அனைவருக்கும் கேப்டனாகவே இருந்தார்.
அந்த வகையில் தற்போது ஒரு கேள்வி எழுந்துள்ளது. உச்சநட்சத்திரங்கள் இருக்கக்கூடிய இந்த சினிமா துறையில் பணப்புழக்கம் அதிகமாக இருக்கிறது. அப்படி இருக்கும்போதும் எங்களுக்குக் கடன் இருக்குன்னு சொல்றாங்களே. அது ஏற்புடையதாக இல்லை. இன்னும் எவ்வளவு தான் கடன் இருக்குன்னு கேட்டு சொல்லுங்கன்னு பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணனிடம் வாசகர் ஒருவர் கேள்வி கேட்டுள்ளார்.
அதற்கு அவர் அளித்த பதில் இதுதான். நடிகர் சங்கத்தைப் பொருத்தவரைக்கும் இப்போ நடிகர் சங்கத்துக்குக் கடன் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனா அந்த நடிகர் சங்கக் கட்டடத்தை நிறைவு செய்ய வேண்டும் என்றால் அவர்களுக்கு 25ல இருந்து 30 கோடி ரூபாய் தேவைப்படுகிறது. அந்தப் பணத்தை சேர்க்கறதுக்காகத் தான் ஒரு பக்கம் கலைநிகழ்ச்சி நடத்தப் பார்க்குறாங்க. இன்னொரு பக்கம் நடிகர்களிடம் நிதி கேட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.
நடிகர் சங்கக் கட்டடம் கட்டுவது குறித்து நடிகர் நாசர் தலைமையில் சமீபத்தில் பொதுக்குழு கூட்டம் நடந்தது. இதில் விஷால் சைக்கிளில் வந்து கலந்து கொண்டது பரபரப்பாகப் பேசப்பட்டது. அதே போல கார்த்தி பேசும்போது நடிகர் சங்கக் கட்டடத்தின் நிதியை திரட்ட கலைநிகழ்ச்சி நடத்தப்படும்.
அந்த நிகழ்ச்சியில் கமல், ரஜினி பங்கேற்பார்கள் என்றும் தெரிவித்து இருந்தார். நடிகர் விஜய் கடனாக இல்லாமல் நிதியாக ஒரு கோடி ரூபாய் சங்கத்திற்குக் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.