Flash BacK: எம்ஜிஆரின் அதீத தலையீடு... மெல்லிசை மன்னருக்கு வந்த அந்த எண்ணம்!

By :  SANKARAN
Update: 2025-05-27 16:30 GMT

புரட்சித்தலைவர் எம்ஜிஆருடைய பல திரைப்படங்களுக்கு இசை அமைத்த பெருமை மெல்லிசை மன்னர் எம்எஸ்.விஸ்வநாதனுக்கு உண்டு. எம்எஸ்வி. இசை அமைப்பாளராக அறிமுகம் ஆனதே எம்ஜிஆரின் படம்தான். அதுதான் ஜெனோவா.

அப்படி இருந்தும் இவர்கள் இருவருக்கும் இடையில் இந்தப் பாடல் விஷயத்தில் உரசல்கள் இருந்து கொண்டே இருந்தது என்பதுதான் உண்மை. இதுகுறித்து மெல்லிசை மன்னர் எம்எஸ்வி. என்ன சொல்றாருன்னு பார்க்கலாம்.

ஆரம்பகட்டத்துல எம்ஜிஆரின் படங்களுக்கு நான் இசை அமைத்தபோது அவரோட தலையீடு இருந்ததே இல்லை. ஒரு காலகட்டத்துக்குப் பின்னாலே என்னை அழைத்த எம்ஜிஆர் இனிமே நீ பாடல்களுக்கு இசை அமைக்கும்போது 'முதல்ல எனக்கு அந்த டியூனைப் பாடிக் காட்டணும். நான் ஓகேன்னு சொன்ன பிறகுதான் அந்தப் பாடலை நீ பதிவு பண்ணனும்'னு எங்கிட்ட சொன்னார் எம்ஜிஆர்.

நானும் சரி என்று ஒப்புக் கொண்டேன். ஆனால் நான் அப்படி ஒப்புக்கொண்டது தவறோ என்று நினைக்கும்படி பல நிகழ்ச்சிகள் நடைபெற்றன. எம்ஜிஆரின் அதீத தலையீடு காரணமாகவே ஒரு சில பாடல்கள் நன்றாக அமையாமல் போய்விட்டனவோ என்ற எண்ணம் எனக்கு உண்டு என்று ஒரு பத்திரிகை பேட்டியில் மெல்லிசை மன்னர் எம்ஸ்.விஸ்வநாதன் பதிவு செய்துள்ளார். மேற்கண்ட தகவலைப் பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் தனது யூடியூப் சேனலில் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


எம்ஜிஆரைப் பொருத்தவரை சினிமாவில் பல விஷயங்களை விரல் நுனியில் தெரிந்து வைத்து இருந்தார். டெக்னிகல் விஷயங்களிலும் உதாரணத்திற்கு கேமரா கோணங்களிலும் அவர் கவனம் செலுத்துவார்.

அவர் இயக்கிய படங்களின் வெற்றியே இதற்கு சாட்சி. உலகம் சுற்றும் வாலிபன், நாடோடி மன்னன், மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் ஆகிய படங்களை இயக்கியவர் எம்ஜிஆர் தான். அவரின் படங்களில் பாடல்கள் எல்லாமே சிறப்பாக வரக் காரணம் அவர் இசை அமைப்பாளரின் கூடவே இருந்து தனக்குத் தேவையான பாடல்களை வாங்கி விடுவார் என்கிறார்கள். ஆனால் இங்கு எம்எஸ்வி. இப்படி தெரிவித்து இருப்பது ஆச்சரியத்தைத் தருகிறது. 

Tags:    

Similar News